home-vayusutha: ஸ்லோகம் கோவில்கள் கட்டுரைகள்
boat

ஸ்ரீ ஆஞ்சநேயர் திருக்கோயில், பந்கி , கான்பூர், உத்திர பிரதேசம்

ஸ்ரீ அகிலேஷ் சந்திர செக்சேனா, கான்பூர்


கான்பூர்

ஸ்ரீ ஆஞ்சநேயர் திருக்கோயில், பந்கி , கான்பூர் UP கங்கையின் தென்கரையில் அமைந்துள்ள மிக அருமையான இந்நகரம் கான்பூர். உத்திர பிரதேசத்தில் முக்கியமான நகரம். கங்கை இங்கு மிக நளினமாகவும் அதே சமயம் கம்பீரமாகவும் நடைப்போடுகிறாள். கங்கை கரையில் உள்ள ஒவ்வொரு நகரமும் தனிதன்மையுடனும் அதற்கான தனி வரலாறும் பெற்றுள்ளன. கான்பூர் இதற்கு விதி விலக்கு அல்ல. மஹாபாரதத்துடன் சம்பந்தப்பட்ட இடம் மட்டும் அல்ல இது, இராமாயணத்துடனும் தொடர்புள்ள இடம் இது. ஸ்ரீ கிருஷ்ணருக்கு கண்னயா என்பதும் பெயர். கண்னயாவின் பெயரால் உருவானது கான்பூர் என்று ஒரு சிலர் கூறுவர். மற்றோர் இவ்விடம் துரியோதனனால் கர்ணனுக்கு கொடுக்கப்பட்டு ’கார்ணபூர்’ என்றிருந்து மருவி கான்பூர் ஆனதாக கூறுவர். எப்படியானாலும் அருகில் உள்ள ஜஞ்மு, [B]பித்தூர் ஆகிய இடங்களிலிருந்து ஆழ் ஆய்வில் கிடைத்த சாட்சியங்களினால் இது வேத காலத்திலிருந்தே இருப்பது உறுதிச் செய்யப் பட்டுள்ளது. சுமார் 600 கி.மு முதல் இவ்விடத்தில் மக்கள் வசித்து வருகிறார்கள். புராணங்களிலிருந்து இவ்விடத்தில் பிரம்மாவின் எட்டாவது தலைமுறையை சேர்ந்த யயாதி இங்கு கோட்டை கட்டி ஆட்சி புரிந்துள்ளார். அப்பொழுது சித்தாபுரி என்னும் பெயர் இருந்திருக்கிறது.

பித்தூர்

கங்கையின் கரையில் சுமார் 20 கி.மீ. தொலைவில் உள்ள பித்தூர் 52 ஸ்நான கட்டங்களை கொண்டு ’பாவன் [52] காட்டோங்கி நகரி’ என்று சிறப்பாக இருந்திருக்கிறது. தற்பொழுது 29 ஸ்நான கட்டங்களே உள்ளன. இங்கு கங்கையில் ஸ்நானம் செய்வது மிக விசேடமாக கருதப்படுகிறது. பிரம்மா இங்கு கங்கை கரையில் அஸ்வமேத யாகம் செய்திருப்பது மற்றொரு விசேடம். ஸ்ரீவால்மீகி முனிவரின் ஆஸ்ரமமும் இங்கு உள்ளது. ஸ்ரீசீதாதேவியும் அவளது மகன்கள் லவனும் குசனும் இங்குதான் தங்கியிருந்தார்கள் என்பது மற்றொரு விசேடம்.

பந்கி

வேதகாலம் முதல் சரித்திரம் உள்ள கான்பூரில் பந்கி என்பது நகர எல்லையிலேயே உள்ள இடம். மிக பெரிய மின் உற்பத்தி [power generation]நிலையமுள்ள இடம். எப்படி பித்தூர் வால்மீகியுடன் தொடர்புள்ள இடமோ அப்படி பந்கி அனுமாருடன் தொடர்புடைய இடம். இராமயணத்துடன் தொடர்புடைய இடங்களில் அனுமார் இல்லாமல் ’பூரணம்’ ஆவதில்லை போலும். பந்கியில் அனுமாருக்கு தனிக் கோயில் உள்ளது, அவர் நமக்கு வலிமையை [power generation] உற்பத்தி செய்து தக்கவும் வைக்க வல்லவர்.

கோயில்

இங்குள்ள அனுமாரை பந்கி அனுமார் என்றே அழைக்கிறார்கள். உத்திர பிரதேசம் மட்டுமல்லாமல், பிகார், பஞ்சாப், டில்லி என்று பல ஊர்களிலிருந்து பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளார்கள். மிக பெரிய இடத்தில் சற்றே உயரமுள்ள இடத்தில் அமைந்துள்ளது இக்கோயில். தொலைவிலிருந்தே நீண்ட உயரமான கோபுரம் நம்மை அழைக்கிறது. கோயிலுக்கு கிழக்கு, வடக்கு, மேற்கு திசைகளில் நுழைவு வாயில்கள் உள்ளன.

தலபுராணம்

அனுமன் மற்றும் தலைமை பூசாரி, பந்கி, கான்பூர், உ.பி. வடக்கு தேசங்களில் தலபுராணம் என்பது எழுதி வைக்கப் படாத ஒன்று. இப்பொழுதுள்ள மஹன்த் பத்தாவது தலைமுறையாக பூசை செய்பவர். பரம்பரயாக கூறப்படும் தலபுராணம். இக்கோயில் சுமார் நானுறு வருடம் பழமையானாதும் மஹன்த் ஸ்ரீ ஸ்ரீ 1008 புருக்ஷோத்தம் தாஸ் என்பவரால் ஸ்தாபிக்கப்பட்டது. ஶ்ரீ ஹிந்துசிங் அரசன் ஶ்ரீகிருஷ்ணர் மீது உள்ள அபிமானத்தால் ’கானப்பூர்’ என்று பெயரிட்டு உருவாக்கி ’ஶ்ரீகிருஷ்ண ஜன்மாஷ்டமி’ அன்று பிரவேசித்த நகரம் தான் இன்றைய கான்பூர். மஹன்த் புருஷோத்தம் தாஸ் காலம் இதற்கும் முன்தியது. அவர் ஒரு முறை சித்திரகூடம் சென்றிருந்தார். அங்கு காமகிரியை வலம் வந்து தனது தவத்தை முடித்துக் கொண்டு, பித்தூருக்கு புறப்பட்டார். மறுநாள் காலை தனது மாட்டு வண்டியில் புறப்பட்டார். சற்று தூரத்தில் வண்டி பெரிய கல் மீது மோதி நின்றது. கீழே இறங்கி கல்லை அப்புறப்படுத்த பார்த்தவர், அக்கல்லில் அனுமாரின் விக்ரஹம் இருப்பதை கண்டார். இதனை தனது பெரும் பேராக நினைத்து சித்திரகூடத்திலிருந்து அனுமார், வால்மீகி ஆஸ்ரமம் இருக்கும் பித்தூர் செல்ல விரும்புவற்கான அறிகுறியாகக் கொண்டார். தெய்வ இச்சையாகக் கொண்டு தனது மாட்டு வண்டியில் அனுமாரை பயபக்தியுடன் ஏற்றிக் கொண்டு பித்தூர் நோக்கி பயணமானார்.

பல நாட்கள் பயணித்த பிறகு, பித்தூருக்கு பத்து கோஞ் (சுமார் பதினைந்து கிலோ மீட்டர்கள்) இருக்கும் போது, வண்டி நகர மறுத்தது. மாடுகள் சுமை அதிகம் இருப்பதுப் போல் சம்ஞைகள் காண்பித்தன. மஹன்த் வண்டியை நிறுத்திவிட்டு மாடுகளை இளப்பார விட்டுவிட்டு தானும் மரத்தடியில் இளைப்பாரினார். அப்பொழுது மஹன்த் ஹனுமார் இங்கேயே இருக்க விருப்பம் தெரிவிப்பதாக உணர்ந்தார். தெய்வ ஸங்கல்பமாக இதை அறிந்து அனுமாரை அந்த இடத்திலேயே பிரிதிஷ்டை செய்ய முடிவு செய்தார். ஊர் மக்களை கூட்டி அனுமாரை அங்கேயே பிரிதிஷ்டை செய்தார். இன்று இவ்விடத்துக்கு பெயர் பந்கி. அனுமார் பந்கி கிராமத்தில் இருப்பதால் அவரை பந்கி ஹனுமார் என்றே மக்கள் அழைக்கிறார்கள். நினைத்ததை நடத்தி வைக்கும் பந்கி அனுமாரின் பிரசுத்தம் அக்கம் பக்கத்திற்கு பரவலாயிற்று. இன்று வட இந்தியாவில் மிக பிரபலமானவராக உள்ளார் பந்கி அனுமார்.

அனுமாரின் விசேட ரூபம்

அஹிராவணன், ராம லக்ஷ்மணர்களை பாதாள லோகத்திற்கு எடுத்துச் சென்ற போது, அவர்களை மீட்டு, அஹிராவணனை வதம் செய்தவர் அனுமார். அப்பொழுது அவர் தோற்றம் எப்படி இருந்திருக்குமோ [பெருமிதம்-இராமரின் எதிரியை அழித்தது, நிம்மதி-இராமரை மீட்டது, கவலை- ராவணனின் வதம் நடக்க வேண்டுமென்று, சாந்தம்- இராமரால் அது முடியுமென்று] அப்படி பல உணர்ச்சிகளை கண்களில் கொட்டுகிறார் பந்கி அனுமார்.

பந்கி அனுமார் இறை அருளால் கிடைக்கப் பெற்றது என்பது தெளிவு. மற்றொரு ஆச்சரியாமான விசேடம்- காலையில் பால அனுமாராக, மதியம் யுவனாக, மாலையில் மஹாபுருஷராக அறியப்படுவதே.

 

திருக்கோயில் இருப்பிடம் :     "ஸ்ரீ ஆஞ்சநேயர் திருக்கோயில், பந்கி , கான்பூர்"

 

அனுபவம்
அடுத்த முறை கான்பூர் சென்றால், பந்கி அனுமாரை தரிசனம் செய்யவும். அந்த முவுலகம் சுற்றும் முக்கால மஹாபுருஷரின் அருளை அள்ளிவாருங்கள்.

தமிழாக்கம் :திருமதி. ஸ்ரீமதி
முதல் பதிப்பு மே 2014
திருத்தப்பட்ட பதிப்பு: செப்டம்பர் 2020


 

 

ஆஞ்சநேய ஸ்வாமி புகழ் வாழ்க

காற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்
நம்பினோம் நாவரசை நாங்களே
+