home-vayusutha: ஸ்லோகம் கோவில்கள் கட்டுரைகள்
boat

Meenakshi Amman Temple view, a wood engraving by E. Therond, from 'Le Tour du Monde', 1869

ஶ்ரீ ஜயவீர ஆஞ்சநேய சுவாமி திருக்கோயில், சிம்மக்கல், மதுரை, தமிழ் நாடு

ஜி.கே.கௌசிக்


மதுரை

தென் இந்தியாவில் உள்ள புனித தலங்களை பற்றி நினைவு கூறுவதானால் அதில் மதுரை நிச்சயம் முதல் வரிசையில் இடம் பெற்றிருக்கும். மதுரை என்றால் சுந்தரேஸ்வரர், மீனாக்ஷி என்னும் இறைவன் நாமங்கள் நம் மனதில் உதிக்கும். சென்னை கலை பள்ளியை சார்ந்த ஶ்ரீகிருஷ்ணாராவ் அவர்களுக்கு மதராஸ் [தற்போது தமிழ்நாடு] அரசுக்கு சின்னம் வடிவமைக்கும் பணி ஒப்படைக்கப்பட்டது. அவர் உருவாக்கிய சின்னத்தில் இருக்கும் கோபுரம் ஶ்ரீமீனாக்ஷி திருக்கோயிலின் மேற்கு கோபுரம் தான். [சிலர் சொல்வது போல் ஶ்ரீவில்லிபுத்தூர் கோபுரம் அல்ல].

முன்காலத்தில் மதுரை

பாண்டியர்களின் ஆட்சிகாலம் தொடங்கி மதுரை வரலாறு மிக்க தலமாகவே இருக்கிறது. சமீபத்திய வரலாற்றின் ஏட்டிலிருந்து பார்த்தால், மாலிக்காபூர் அரங்கேற்றிய அட்டகாசங்களும், டில்லியை சேர்ந்த சுல்தான்களின் ஆட்சி தென்புறம் வந்ததும் மதுரையை அடிமைப்படுத்தியதும் நினைவுக்கு வரும். மதுரையின் வரலாற்றில் மறுமலர்ச்சி, இங்கு விஜயநகர சாம்ராஜ்ஜியத்தின் பிரதிநித்துவம் வந்த பிறகே என்றால் மிகையாகாது. பிரதிநிதிகள் நாயக்கர்கள் என அழைக்கப்பட்டனர். மதுரையை கலை உணர்வுடனும் பக்தி உணர்வுடனும் சீர் அமைத்து மதுரையை பேற்றூராக ஆக்கியவர்கள் நாயக்கர்கள். இவர்களில் திருமலை நாயக்கரின் பங்களிப்பு மிக அதிகம் என்றால் மிகையாகாது. எடுத்துகாட்டாக ஶ்ரீமீனாக்ஷி திருக்கோயிலின் இராஜ கோபுரம் ஒன்று போதுமே. மதுரையை ஆண்ட மற்றொரு வித்தகர் இராணி மங்கம்மா அவர்கள். அவர்களின் போர் திறமை, நிர்வாக திறமை, சனாதன தர்மத்தில் வைத்திருந்த நம்பிக்கை, கலை பணி திறமை என்று பல திறமைகள் நிறைந்தவராக இருந்தார். பாரத பெண்ணரசிகளில் தனித் தன்மை வாய்ந்து விளங்கியவர் இவர்.

கோயில்கள் ஊர்

இன்றைய சூழலில் மதுரை மிக பெரிய நகரமாக விளங்குகிறது. நாயக்கர்கள் காலத்திலும் அதற்கு முன்பும் கட்டப்பட்ட கோயிலிகள் தவிர புதிய கோயில்களும் வந்துள்ளன. பல இடங்களுக்கு போக்குவரத்து வசதிகள் உள்ளன. உள்ளூர் வியாபாரம் யாத்திரிகர்களை மையமாகக் கொண்டுள்ளதால் வணிகர்கள் மிக நட்புடன் பழகுகிறார்கள். இராமேஸ்வரம் பயணிக்கும் அனைத்து யாத்திரிகர்களும் மதுரை நகரத்தின் வழியாகவே பயணிக்கிறார்கள். ஶ்ரீமீனாக்ஷி அம்மையார் திருக்கோயிலை மையமாக அமைந்துள்ள மதுரையில் இக்கோயில் தான் பிரதானம். யாத்திரிகர்கள் இக்கோயிலை தவிர மதுரையிலும், சுற்றும் உள்ள முருகன், விஷ்ணு கோயில்களுக்கும் விஜயம் செய்கிறார்கள்.

ஶ்ரீ ஜயவீர ஆஞ்சநேய சுவாமி திருக்கோயில்

ஆஞ்சநேயருக்கு என்று தனி கோயில்கள் மதுரையில் பல உண்டு. அப்படி மதுரையில் சிம்மக்கல் என்னும் இடத்தில் உள்ள ஶ்ரீஆஞ்சநேயருக்கான கோயிலுக்கு சென்று வருவோமா? இரயில் நிலையத்திலிருந்தும், பஸ் நிலையத்திலிருந்தும் சுமார் இரண்டே கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது இக்கோயில். இச்சிறிய அழகான கோயிலில் குடிகொண்டிருக்கும் மூலவருக்கு "ஶ்ரீஜய வீர ஆஞ்சநேயர்" என்பது திருநாமம்.

கோயிலின் தல வரலாறு

ஶ்ரீ ஜயவீர ஆஞ்சநேய சுவாமி திருக்கோயில், சிம்மக்கல், மதுரை, தமிழ் நாடு மதுரையில் உள்ள சிம்மக்கல்-இல் குழந்தை ஆனந்த சுவாமி என்னும் யோகி வாழ்ந்து வந்தார். இவரை பல உள்ளூர்வாசிகளுக்கு தெரியும். அவரை மீனாக்ஷி அம்மனின் குழந்தையாகவே [மகனாக] கண்டனர். அதனால் இவர் பெயர் குழந்தை சுவாமி என்றே பிரபலம். இவர் கிருதமாலா நதிகரையில் வசித்து வந்தார். கிருதமாலா என்னும் நதியும் வைகையும் மதுரையில் ஓடும் நதிகள். வைகையில் நீராடிய பின் தனது நிஷ்ட்டையில் அமர்ந்து விடுவார் குழந்தை சுவாமி. ஊர் மக்கள் குழந்தைக்கு அன்னமளிப்பார்கள். இஷ்டமானதை மட்டும் எடுத்துக் கொண்டு மற்றவற்றை வேண்டாம் என்று எடுத்துச்செல்ல சொல்வார் குழந்தை சுவாமி.

ஒரு நன்நாளில் பல ஊர் மக்கள் கனவில் ஶ்ரீஆஞ்சநேயர் தோன்றினார். பெதான்னுடைய விக்ரஹம் ஒன்று கிருதமாலா நதியில் இருப்பதாகவும், எடுத்து பிரதிஷ்டை செய்து வழிபடுமாறும் கூறினார். காலை எல்லோரும் ஒன்று கூடி ஶ்ரீஆஞ்சநேயர் விக்ரஹத்தை எப்படி கண்டுபிடிப்பது என்பது தெரியாமல், குழந்தை சுவாமியை அணுகினார்கள். அவரின் தியானம் முடியும் வரை காத்திருந்தனர். தியானத்தை முடித்த குழந்தை சுவாமி ஊர் மக்களை பார்த்து "நீங்கள் எல்லாம் புண்ணியசாலிகள் ஶ்ரீஆஞ்சநேயரின் தரிசனம் கிடைக்கப்பெற்றவர்கள்" என்றார். பின் அனுமார் எங்கிருக்கிறார் என்று தெரிந்துவிட்டதா? என்று வினவினார். அதாவது அவர்கள் கனவில் ஆஞ்சநேயரை பார்த்ததையும், பின் அனுமார் விக்ரஹத்தை கண்டுபிடித்து விட்டார்களா என்பதும் தான் இந்த விசாரணை. "மதுரையில் ஓடும் கிருதமாலா நதியில் எங்கு என்று தேடுவது? நாங்கள் இப்பொழுது இங்கு வந்திருப்பதே இதற்கு தாங்களின் வழிகாட்டலை பெறவே" என்றனர். சிறிது யோசித்த குழந்தை சுவாமி அவர்கள் எழுந்திருந்தார் "வாருங்கள் செல்வோம்" என்று கிருதமாலா நதியை நோக்கி புறப்பட்டார்.

கிருதமாலா நதியில் ஓர் குறிப்பிட்ட கரையில் குழந்தை சுவாமி அவர்களின் மேற்பார்வையில் தேடல் துவங்கியது. நீண்ட நேரத்தின் பிறகு ஶ்ரீநரஸிம்ம மூர்த்தியின் விக்ரஹம் கிடைத்தது, பின் ஆஞ்சநேயரின் விக்ரஹம் கிடைத்தது, பின் மஹாலக்ஷ்மியின் விக்ரஹம், பின் கருடாழ்வாரின் விக்ரஹம், கடைசியாக விநாயக மூர்த்தியின் இரண்டு மூர்த்தங்கள் கிடைத்தன.

குழந்தை சுவாமி அவர்களுக்கு ஶ்ரீஆஞ்சநேயர் இட்ட கட்டளையை அனுசரித்து இந்த தெய்வ விக்ரஹங்கள் அனைத்தையும் சற்று தொலைவில் கரையோரம் இருந்த இலுப்பை மரத்தின் கீழ் பிரதிஷ்டை செய்வதென்பது தீர்மானம் செய்தார். நதிகரையோரம் இருந்த அந்த இலுப்பை மரம் மிக பழைமையானதாக காய்ந்து போய் ஜீவன்துறக்கும் நிலையில் இருந்தது. ஆனால் நன்நாள் குறிப்பிட்டு, குழந்தை சுவாமி அவர்கள் ஶ்ரீஆஞ்சநேயரை இலுப்பன் மரத்தின் கீழ் பிரதிஷ்டை செய்தார். அருகிலேயே மற்ற தெய்வ விக்ரஹங்களும் பிரதிஷ்டை செய்யப்பட்டன. பின் அங்கு நடந்த அதிசயத்தை பார்த்து மக்கள் ஆச்சரியப்பட்டனர். அங்கு இருந்த இலுப்பை மரம் புதிய துளிர் விட ஆரம்பித்தது, தழைத்து புதுப்பொலிவுடன் திகழ ஆரம்பித்தது.

தற்பொழுதய கோயில்

கோயிலுக்குள் நுழைந்த உடன் பெரிய கூடம் உள்ளது. அக்கூடத்தின் கடைசி பகுதி கர்ப்பகிரஹமாக உள்ளது. கர்ப்பகிரஹம் தடுப்பு சுவரின் மேல் ஶ்ரீராம தர்பார் புடைப்பு சித்திரமாக உள்ளது. கர்ப்பகிரஹத்தின் வலதுபுறம் இலுப்பை மரத்தின் ஒரு பாகம் தெரிகிறது. கர்ப்பகிரஹத்தின் நடுவில் ஶ்ரீஆஞ்சநேயர் தரிசனம் தருகிறார். அவரது இடது புறம் ஶ்ரீயோக நரசிம்ஹர், ஶ்ரீமஹாலக்ஷ்மி, ஶ்ரீகருடாழ்வார் ஆகியோர் தரிசனம் தருகின்றனர். இரண்டு விநாயக மூர்த்திகளும் சுவரை ஒட்டி பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளனர். சுமார் மூனறை அடி உயரமுள்ள உத்ஸவ மூர்த்தி மூலவரின் பக்கத்தில் வைக்கப்பட்டுள்ளது. கர்ப்பகிரஹத்துக்கு மேல் ஏகதள விமானம் அமைக்கப் பட்டு இருக்கிறது.

கர்ப்பகிரஹத்தை வலம் வரும் போது, ஶ்ரீவிஷ்ணு துர்க்கையும், ஶ்ரீசுதர்ஸனதாழ்வாரும் தனிதனி சன்னிதியில் தரிசனம் தருகிறார்கள். சற்றே நகர்ந்தால் தல விருக்ஷத்தின் நடுவில் தானாக, இயற்கையாக இருக்கும் உருவத்தில் ஶ்ரீஆஞ்சநேயர் நமக்கு தரிசனம் தருகிறார்.

சிம்மக்கல் ஶ்ரீ ஜய வீர ஆஞ்சநேயர்

ஶ்ரீ ஜயவீர ஆஞ்சநேய சுவாமி, சிம்மக்கல், மதுரை, தமிழ் நாடு மூலவர் ஶ்ரீஜய வீர ஆஞ்சநேயர் சிலாரூபம் இரண்டரை அடி உயரம் இருக்கலாம். பகவானின் இடது திருக்கரம் சற்றே ஓங்கிய நிலையில் சஞ்சீவி பர்வதத்தை தூக்கி பிடித்திருக்கிறது. அவரது இடுப்பில் ஊன்றிய வலது திருக்கரம் கதையை பிடித்திருக்கிறது. அவரது வாலில் சிறிய மலையை கட்டி பிடித்திருப்பதாக கூறுகிறார்கள். ஆனால் அவரது வாலின் நுணியில் சிறிய மணி இருப்பது தெரிகிறது. அவரது திருப்பாதங்கள் மிக அற்புதமாக அமைந்துள்ளது, அவைகள் ஶ்ரீராமனின் பக்தர்களுக்கு உதவ குதித்தெழ தயார் நிலையில் உள்ளது போல் இருக்கிறது. கருணை மிகு கண்கள் தனது கடாக்ஷத்தினால் பக்தர்களை அவரிடம் ஐய்கியப்படுத்துகிறது. அபிஷேகம் செய்யும் போது பகவான் வயது முதிர்ந்தவராக [விருத்தர்] காணப்படுவார் என்கிறார்கள்.

சைவ-வைஷ்ணவ ஒற்றுமை

ஶ்ரீகுழந்தை சுவாமிகள் சிவ ஆகம விதிகளின்படி ஆஞ்சநேயரை பிரதிஷ்டை செய்தார் என்பதால் இங்கு குங்குமத்துடன் விபூதியும் பிரசாதமாக கொடுக்கப்படுகிறது. ஶ்ரீநரசிம்மர் முதலில் கிருதமாலா நதியிலிருந்து முதலில் தோன்றினார் என்பதால் ஆடி மாதம் வரும் ஸ்வாதி நட்சத்திரத்தில் இக்கோயிலின் பிரம்மோஸ்சவம் ஆரம்பிக்கிறது. இந்த பதினைந்து நாள் பெருந்திருவிழா மிக கோலாகாலமாக கொண்டாடப்படுகிறது. தினமும் பகவானுக்கு விதவிதமாக அலங்காரம் செய்து அழகு பார்க்கிறார்கள். அதுவும் "விருத்த அலங்காரம்" அன்று பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.

இத்திருக்கோயிலின் விசேடம் ஆதி பிரபுவான ஶ்ரீகணபதியும் அந்தபிரபுவான ஶ்ரீஆஞ்சநேயரையும் ஒருங்கிணங்க ஒரே கர்ப்பகிரஹத்தில் தரிசிக்கலாம். மற்றுமொரு விசேடம் பெரிய திருவடியாகிய ஶ்ரீகருடாழ்வாரையும், திருவடியாகிய ஶ்ரீஆஞ்சநேயரையும் ஒரே கர்ப்பகிரஹத்தில் தரிசிக்கலாம்.

 

திருக்கோயில் இருப்பிடம் :    

 

அனுபவம்
மதுரை செல்லுங்கள் ஶ்ரீஜய வீர ஆஞ்சநேயரின் ஆசிகளை அள்ளி வாருங்கள்.

தமிழாக்கம் :திருமதி. ஸ்ரீமதி
முதல் பதிப்பு: மே 2017
திருத்தப்பட்ட பதிப்பு: செப்டம்பர் 2020


 

 

ஆஞ்சநேய ஸ்வாமி புகழ் வாழ்க

காற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்
நம்பினோம் நாவரசை நாங்களே
+