home-vayusutha: ஸ்லோகம் கோவில்கள் கட்டுரைகள்
boat

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் திருக்குளம்


ஸ்ரீவீர ஆஞ்சநேய ஸ்வாமி திருக்கோயில் மயிலாப்பூர், சென்னை

ஜீகே கௌசிக்


சென்னை பட்டணத்தின் மயிலாப்பூர்

மயிலாப்பூர் வீர ஆஞ்சநேய ஸ்வாமி திருக் கோயில்-1999இல் தற்போது சென்னை என அழைக்கப்படும் மெட்ராஸ் நகரத்திற்கு வந்திருந்த மக்கள் மைலாப்பூரில் உள்ள பிரமாண்டமான மற்றும் அற்புதமான கபாலிஸ்வரர் கோயிலை நிச்சயமாக பார்த்திருப்பார்கள். அழகு மிகு கம்பீரமான இக்கோயிலின் ராஜா கோபுரம் பார்ப்பவர் நினைவை விட்டு அகலாது என்பது உண்மை. இந்த கோயிலுக்குள் இருக்கும்போது நகரத்தின் ஆரவாரகளிலிருந்தும் மக்களின் நெருச்சலிருந்தும் வெகு தொலைவில் நாம் இருப்பதை உணர முடியும். சிவபெருமானைப் புகழ்ந்து பாடிய சிறந்த நான்கு புனிதர்களில் ஒருவர் ஸ்ரீ திருஞான சம்பந்தர். ஸ்ரீ திருஞான சம்பந்தர் இக்கோயிலில் உறையும் இறைவன் கபாலீஸ்வரரை புகழ்ந்து பாடல் பாடினார், எனவே மயிலாப்பூரில் ஶ்ரீகபாலீஸ்வரர் கோயில் வெகு காலமாக இருக்கிறது என்பது உண்மை.

உலகம் புகழும் "திருக்குறள்" எழுதிய கவி ஸ்ரீ திருவள்ளுவர் மைலாப்பூரில் பிறந்தவர். அன்னார் மைலாப்பூரில் பிறந்த இடத்தில் ஒரு கோயில் உள்ளது. சென்னை நகரில் மயிலாப்பூர் பகுதி பழமையான இடங்களில் ஒன்றாகும். திருவொற்றியூர் சென்னை பட்டணத்தின் வடக்கு எல்லை என்று கூறப்பட்டாலும், தெற்கு எல்லை திருவான்மியூர். பட்டணத்தின் (பட்டணம் என்பது ஒரு கடல் கடற்கரை நகரத்தை குறிக்கும் சொல்) மைய பகுதி மைலாப்பூர் மற்றும் திருவல்லிக்கேணி ஆகும்.

தண்ணீர் துறை ஆஞ்சநேய சுவாமி கோயில்

திருவள்ளுவர் கோயிலுக்கு அருகில் புகழ்பெற்ற ஆஞ்சநேய சுவாமி கோயில் உள்ளது. சென்னையின் மைலாப்பூரில் உள்ள சமஸ்கிருத கல்லூரிக்கு அருகிலுள்ள பகவான் ஆஞ்சநேய சுவாமி கோயில் சென்னையின் பழமையான ஆஞ்சநேய கோயில்களில் ஒன்றாகும். இந்த கோயில் நாற்பது மற்றும் ஐம்பதுகளில் "தண்ணீர் துறை ஆஞ்சநேயர் கோயில்" என்று பிரபலமாக அறியப்பட்டது, ஏனெனில் இந்த கோயில் "தண்ணீர் துறை" காய்கறி சந்தைக்கு அருகில் அமைந்துள்ளது. அந்த நாட்களில் சென்னை முழுவதிலும் ஆஞ்சநேயருக்கு மட்டுமே பிரத்யேகமான கோவில்கள் குறைவாகவே இருந்தன. ஆனால் இன்று மைலாப்பூரில் மட்டும் மூன்று ஆஞ்சநேயர் கோயில்கள் இருப்பதால் தற்போது இந்த கோயிலை "லஸ் ஆஞ்சநேயர் கோயில்" என்று அழைக்கிறார்கள்.

இக்கோயில் பல வழிகளில் தனித்துவமானது

இந்த கோயிலின் பகவான் ஆஞ்சநேய சுவாமி பல வழிகளில் தனித்துவம் வாய்ந்தவர். இந்த கோயிலுக்கு அருகிலுள்ள சமஸ்கிருத கல்லூரியில் பிரம்மா ஸ்ரீ அனந்தராம தீட்சிதர், ஸ்ரீ கிருபானந்த வாரியர் போன்ற பல அறிஞர்கள் இராமாயணம் குறித்து சொற்பொழிவுகளை நிகழ்த்தியிருந்தனர். இராம நாமம் உச்சரிக்கப்படும் இடமெல்லாம் இருக்கும் பகவான் ஆஞ்சநேய சுவாமி, கோயிலிருந்தே இராமாயணத்தைக் கேட்டிருந்தார். இந்த ஆஞ்சநேய சுவாமி இந்த சொற்பொழிவுகளுக்குப் பிறகு ராமபக்தர்கள் அதிகமாவதைக் கண்டவர்.

சமஸ்கிருதக் கல்லூரி பல வேத நடவடிக்கைகள், இந்து தர்மம் குறித்த கல்விசார் கலந்துரையாடல்கள் மற்றும் புராணங்கள் மற்றும் இதிகாசங்கள் பற்றிய சொற்பொழிவுகளுக்கு இடமாக இருந்தது.

ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் ஜகத்குரு ஸ்ரீ பரமாச்சார்யா சதுர் மாசத்திற்கான விரதத்தை சமஸ்கிருதக் கல்லூரியில் முகாமிட்டு சந்திர மௌளிஸ்வர பூஜை செய்து கொண்டிருந்தார். மாலை பூஜைக்குப் பிறகு பல நாட்கள் ஸ்ரீ பரமாச்சாரியார் ஆன்மீக போதனைகளால் பக்தர்களுக்கு அறிவொளி கொடுத்தார். இந்த போதனைகளில் தர்மத்தைப் பற்றிய பல விளக்கங்கள் பக்தர்களுக்கு வழங்கப்பட்டன. இந்து தர்மத்தைப் பற்றி மக்கள் கொண்டிருந்த பல தெளிவற்ற கருத்துக்கள் - ஒரு சாதாரண மனிதனுக்கு இந்த கருத்துக்கள் மர்மத்தின் எல்லையாக இருந்தன - அவருடைய போதனைகளால் தெளிவுபடுத்தப்பட்டன. இந்த கோயிலின் பகவன் அஞ்சநேய சுவாமி சமஸ்கிருத கல்லூரியில் இந்த அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் செயல்பாடுகளுக்கும் சாட்சியாக இருந்துள்ளார்.

ஸ்ரீ ராஜாஜியின் இராமாயணம் (மீண்டும் கூறப்பட்டது)

மயிலாப்பூர் வீர ஆஞ்சநேய ஸ்வாமி திருக் கோயில்-2017இல் ராஜாஜி என்று பிரபலமாக அறியப்பட்ட இந்தியாவின் முதல் இந்திய கவர்னர் ஜெனரல் ஸ்ரீ சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரி, தமிழில் ராமாயணத்தை "சக்கரவர்த்தி திருமகன்" (பேரரசரின் பெருமகன் என்று பொருள்) என்ற தலைப்பில் விவரித்தார். தமிழ் வார இதழான "கல்கி" யில் இதை ஒரு தொடராக வெளியிடுவதற்கு முன்பு, ஸ்ரீ ராஜாஜி அவர்கள் ஸ்ரீ ஆஞ்சநேயரின் ஆசீர்வாதம் கோரி கையெழுத்துப் பிரதியை இந்த கோயிலில் வைத்திருந்தார்.

தல புராணம்

சுமார் நானூறு ஆண்டுகளுக்கு முன் மைசூர் மாநிலத்திலிருந்து அரசியல் கொந்தளிப்பின் காரணமாக வெளியேறிய ஷேட்டி எனப்படும் வணிக குலத்தவர்கள் சென்னையை தங்கள் இருப்பிடமாக கொண்டனர். அவர்கள் தங்கள் குல தெய்வமான ஸ்ரீ ஆஞ்சநேய ஸ்வாமியின் சிலையினை தங்களுடன் கொண்டு வந்தனர். சென்னையில் அவர்கள் மயிலாப்பூரில் குயவர்பேட்டையில் குடிப்புகுந்தனர். தங்கள் இல்லத்திற்கு அருகாமையில் அவர்கள் மைசூரிலிருந்து கொண்டு வந்த ஆஞ்சநேயர் சிலையையும் குடி வைத்தனர். ஆஞ்சநேய ஸ்வாமிக்கு சிறியக் கோயில் கட்டினார்கள். அக் கோயில் 'அனுமந்தராயர் குடி' என்று அழைக்கப் பட்டது. நாளடைவில் ஷேட்டி இனத்தவர்கள் தமிழ் நாட்டில் உள்ள செட்டியார் இனத்தவருடன் இணைந்து விட்டனர் இந்த மயிலாப்பூரில் குயவர்பேட்டை வாசிகள்.

சிறியதாக இருந்த இக்கோயில் இப்பொழுது பக்தர்களின் கைங்கரியத்தாலும், தர்மகர்த்தாவினாலும் விரிவு படுத்தப்பட்டுள்ளது. ராஜகோபுரம், கல்யாணமண்டபம் ஆகியவைகளும் கட்டபட்டுள்ளது. இந்த க்ஷேத்திரத்தில் வடமாலை மிக ப்ரசுத்தம். ஆங்கில வருடபிறப்பு அன்று ஐநூறு வடமாலைக்கு மேல் பகவான் ஆஞ்சநேய ஸ்வாமிக்கு சாத்தப் படுகிறது.

சுவாமியின் சிற்பம்

மேற்கு நோக்கியுள்ள சன்னிதியில் புடைப்பு சிலை ["அர்த்த ஷிலா"] வடிவத்தில் பகவன் ஆஞ்சநேய சுவாமி விக்கிரஹம் உள்ளது. அவர் தெற்கு நோக்கி நடந்து செல்வது போல் காணப்படுகிறார். பக்தரை முதலில் ஈர்ப்பது அவரது ஒளிரும் கண்களும், காதுகளில் அவர் அணிந்துள்ள குண்டலமும் தான். அவரது வலது கை "அபய முத்திரை"யில் உள்ளது, அவரது இடது கையை இடுப்பில் ஊன்றி கதாயுதத்தை மோல் நோக்கி பிடித்துள்ளார். அவரது மேல்கைகளில் அவர் கேயூரம் என்று அழைக்கப்படும் கையைச் சுற்றி அணியும் சித்தரிக்கப்பட்ட பட்டையை அணிந்துள்ளார் மற்றும் அவரது மணிக்கட்டில் கங்கணம் எனப்படும் திடமான வளையல்கள் உள்ளன. அவரது சரணாரவிந்தத்தை தண்டை எனப்படும் கணுக்கால் அணிகலம் அலங்கரித்துள்ளது. அவரது வால் (லங்கூலம்) தலைக்கு மேலே உயர்ந்து தெற்கு நோக்கிச் செல்கிறது. ஸ்ரீ லட்சுமி, மற்றும் ஸ்ரீ சரஸ்வதி ஆகியோரைப் போலவே பகவன் தாமரை பீடத்தில் சேவை சாதிப்பதைக் காணலாம்.

பகவான் ஆஞ்சநேயர் சன்னிதியில் ஆஞ்சநேய சுவாமியின் உட்சவமூர்த்தியையும் ஒரு பஞ்சலோக வேணுகோபால சுவாமியையும் காணலாம். பகவான் ஆஞ்சநேயர் சன்னிதியின் வலதுபுறத்தில் 1954 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட பெருமாள் கோதாண்ட ராமர் சன்னிதி, ஸ்ரீ ராமருடன் அவரது துணைவியார் தேவிஶ்ரீ சீதா, அவரது அனுஜர் லட்சுமணர் என்னும் இளய பெருமாள் ஆகியோர் சேவை சாதிக்கிறார்கள்.

 

திருக்கோயில் இருப்பிடம் :     " ஸ்ரீவீர ஆஞ்சநேய ஸ்வாமி திருக்கோயில், மயிலாப்பூர், சென்னை "

 

அனுபவம்
மனதினை ஒருமுக படுத்தி இவரை பிராத்தனை செய்யுங்கள், நினைத்தவை அனைத்தும் கிட்டும். இந்த க்ஷேத்திரத்தின் வீர ஆஞ்சநேய ஸ்வாமி வாஞ்சிதாய ப்ரதாயானன், நினைத்ததை நினைக்ககும் முன் நிறைவேற்றி வைப்பவர்.

தமிழாக்கம் : திருமதி. ஸ்ரீமதி
முதல் பதிப்பு 13.12.2001
திருத்தப்பட்ட பதிப்பு: ஜூலை 2020


 

 

ஆஞ்சநேய ஸ்வாமி புகழ் வாழ்க

காற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்
நம்பினோம் நாவரசை நாங்களே
+